அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது தேச துரோகமா..? ஒரே மதம், ஒரே மொழி என்பது தேசவிரோதமா..? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

author img

By

Published : Aug 7, 2022, 8:43 AM IST

cm stalin  cm stalin questions  cm stalin in Tirupur meeting  முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி  முதலமைச்சர் ஸ்டாலின்  கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு  கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே மதம் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்.

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஆக. 6) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் ஒரே கொள்கை கூட்டத்தை சார்ந்தவர்கள்.

தியாகத்தால் மூத்தவர் நல்லகண்ணு: நாம் தனித்தனி இயக்கத்தை சார்ந்தவராக இருந்தாலும் கொள்கையின் அடிப்படையில் ஒரே இயக்கமாக உள்ளோம். இந்த மாநாடு நடைபெறும் நேரத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு தமிழ்நாடு அரசின் தகைச்சால் தமிழர் விருது என்ற அறிவிப்பு சாலப் பொருந்தும்.

நல்லகண்ணுவை இயக்கத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது, இயக்கமே வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் போராளி அவர். 97 வயது கடந்தும் அவர் இந்த சமுதாயத்திற்காக தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார். வயதால் மட்டுமல்ல தொண்டாலும் மூத்தவர். தியாகத்தால் மூத்தவர், அரசியல் போராட்டங்களால் மூத்தவர். நாட்டிற்கு தன்னையே ஒப்படைக்கும் மனம் உறுதி பெற்றவர், எளிமையின் சின்னமாக கொள்கையின் அடையாளமாக வாழும் நல்லகண்ணுவிற்கு இவ்விருதை வழங்குவது எனக்கு கிடைத்த பெரும் பெயராக கருதுகிறேன்” என பெருமிதம் கொண்டார்.

சமூக நல்லிணக்கம்: தொடர்ந்து பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் வட்டம், சிராகையில் கிராமத்தில் காந்தி மற்றும் இடதுசாரி தலைவர் ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் சிறப்பான வகையில் மணி மண்டபம் கட்டப்படும். மாநிலங்களை உருவாக்குவதால், இந்திய ஒருமைப்பாடு வளம் பெருமே தவிர, சிதையாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியவர் ஜீவா. இந்த சிந்தனைகள் இன்றைய இளைஞர்களிடம் பரவினால் சமூக நல்லிணக்கம் ஏற்படும். மாநில உரிமைகள் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்திய நாட்டிற்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நல்லிணத்தை கெடுப்பது, மாநிலங்களின் உரிமைகளை சிதைப்பது, இந்த இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கிறோம். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள், அனைத்து மதத்தவர்களுக்கும் சமமான வழிபாட்டு உரிமைகள், பண்பாட்டு வேற்றுமைக்கு எந்த தடையும் இல்லை.

அனைவரும் ஒன்று: மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து இருந்தாலும், அண்டை மாநிலங்களோடு நட்புறவு, பொருளாதார ஏற்றுமதி, இறக்குமதியில் நட்புறவு, என எத்தனையோ நல்ல நோக்கத்துடன் இந்தியா அமைதியாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. இதனை சிதைப்பதை நோக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள்தான் தேச விரோத சக்திகள், இவைதான் நாட்டினுடைய எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மை பார்த்து தேச விரோதிகள், நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள், அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள், எந்த மதத்தை சார்ந்தவர்களின் வழிபாட்டு உரிமையிலும் தலையிடாதீர்கள், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே மதம் ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்க வேண்டிய கேள்வி இது மட்டும்தான்.

இது இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கேட்க வேண்டிய கேள்வி மட்டும் அல்ல, இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி. இது ஆகஸ்ட் மாதம், விடுதலை மாதம், வேற்றுமைகளை கடந்து இந்தியாவின் மக்களாக நம்மை நாமே உணர்ந்து, நம் முன்னோர்கள் போராடியதால்தான் நமக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. வேற்றுமைகள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவதால் தான் 75 ஆண்டுகள் கடந்தும், விடுதலை இந்தியா கம்பீரமாக காணப்படுகிறது.

எது திராவிட மாடல்...?: ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், அன்பு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், இரக்கம், ஒருவரை ஒருவர் மதித்தல், அரவணைத்தல் ஆகியவைதான் இந்தியாவின் பண்பாடுகளாக அமைய வேண்டும், இவற்றை நாம் எப்படி கடைப்பிடிக்கப் போகிறோம் என்பதில்தான் நம்முடைய எதிர்காலம் அமையப்போகிறது.

சமத்துவம், சகோதரத்துவம், மானுட பற்று, மனித நேயம், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களின் நலம், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், ஒடுக்கப்பட்டோர்களுக்கான சமூக விடுதலை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராவது போன்றவையும் வளர வேண்டும். வளர்ச்சி திட்டமும் சமூக மேம்பாடும் ஒருங்கிணைந்து வளர்வதே, திராவிட மாடல்.

மதவாதம், சாதியவாதம், சனாதனம், வர்க பேதம், ரத்த பேதம், பால் பேதம், எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மம் ஆகியவற்றுக்கு எதிரானது திராவிடம். தமிழ்நாடு என்றால் அது இடத்தைக் குறிக்கும். ஆனால், திராவிடம் என்று சொன்னால் கொள்கையை, கோட்பாட்டை, அது குறித்து நிற்கும் விளிமியங்களை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ்நாட்டு அரசியலில் சமத்துவத்தை உணர்த்தி நிற்கும் குறிச்சொல். திராவிடம் என்பது தமிழினத்தின் சமூக விடுதலைக்கு அடையாளமாக இருக்கும் வரலாற்று சொல்.

ஒற்றுமை: இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பாகவோ, எல்லையாகவோ நாம் கருதக்கூடாது, இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். அத்தகைய அனைத்து மக்களுக்கான நாடாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்திற்குள் உள்ளடங்கி இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஜனநாயகம் வளர்ச்சி பெறும், அதன் மூலம் தேசிய ஒற்றுமை அதிகரிக்கும் என்று சொன்னவர் ஜீவா.

ஜிஎஸ்டி வரியை உயர்த்தி விட்டு, மாநிலங்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். வரியை மொத்தமாக வாங்கிக்கொண்டு, அதற்கான இழப்பீட்டை உரிய காலத்தில் தராமல், மாநிலங்களை வஞ்சித்து வருகிறார்கள். மாநிலங்களின் கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை மூலமாகவும் நீட் தேர்வு போன்றவை மூலமாகவும் பறிக்கிறார்கள்.

மக்களிடத்தில் விழிப்புணர்வு: அனைவருக்கும் கல்வி என்ற உன்னதமான நோக்கத்தை சிதைத்து, பள்ளிகளை தாண்டவிடாமல் பிள்ளைகளை தடுக்க பார்க்கிறார்கள். நுழைவுத்தேர்வு என்பது உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நம் பிள்ளைகளை தடுக்கும் தேர்வாக இருக்கிறது. இந்தி மயமாக்குதல் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு, தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் தருவதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் உரிமை என்பது பறிக்கப்பட்டுள்ளது. பேச முற்படும் உறுப்பினர்கள் அவையை விட்டு நீக்கப்படுகிறார்கள். ஒற்றை ஆட்சி தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள், இவற்றை முழுமையாக நாம் எதிர்த்தாக வேண்டும்.

இவை குறித்து மக்களிடத்தில் பரப்புரை செய்தாக வேண்டும், கூட்டு இயக்கம் நடத்தியாக வேண்டும். இது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி. ஒற்றை ஆட்சியை எதிர்த்து நாம் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைந்து உறுதியோடு குரல் கொடுக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: "காவிரி கரையோர மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு" - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.